கோலாலம்பூர், டிச. 12- இங்குள்ள புக்கிட் ஜாலில் தேசிய
விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 2024 ஆசியான் கிண்ண
கால்பந்து போட்டியின் ஏ பிரிவு ஆட்டத்தில் மலேசியாவின் ஹரிமாவ்
மலாயா அணி தீமோர் லெஸ்தே குழுவை 3-2 என்ற கோல் கணக்கில்
வென்றது.
இந்த ஆட்டத்தில் பலம் குறைந்த குழுவான தீமோர் லெஸ்தேவிடம்
அவமானமான முறையில் தோல்வியடைவதிலிருந்து மலேசிய அணி
அதிர்ஷ்டவசமாக தப்பியது.
உலக கால்பந்து குழு பட்டியலில் 196வது இடத்தில் இருக்கும் தீமோர்
லெஸ்தே குழுவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை
மலேசிய பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயிற்றுநர் மார்ட்டி
விசென்தே தலைமையிலான இந்த அணி கோலடிப்பதற்கு பெரிதும்
போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
சொந்த அரங்கில் 7,450 ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய உலகின் 132வது
தர நிலைக் குழுவான ஹரிமாவ் மலாயா, முதலாவது கோலை
அடிப்பதற்கு ஆட்டத்தின் 38வது நிமிடம் வரை காத்திருக்க வேண்டிய
நிலை உண்டானது.
எனினும், முதல் கோலின் வழி கிடைத்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட
நீடிக்காத நிலையில் முதல் பாதி ஆட்டத்திலேயே தீமோர் லெஸ்தே
கோலைப் புகுத்தி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.
இந்த தாக்குதலிலிருந்து மலேசிய அணி சுதாரிப்பதற்குள் அடுத்த
மூன்றாவது நிமிடத்தில் தீமோர் லெஸ்தே மேலும் ஒரு கோலை புகுத்தி
தேசிய அணியைத் நிலைதடுமாறச் செய்தது.
ஆட்டத்தின் 70 மற்றும் 83வது நிமிடங்களில் மலேசிய அணி மேலும் இரு
கோல்களைப் புகுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற போதிலும் தேசிய குழுவின் ஆட்டத்
திறன் அவநம்பிக்கையை ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த
வரும் ஆட்டங்களில் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரை வென்று
அரையிறுதி சுற்றுக்கு மலேசியா தகுதி பெறுமா என்ற கேள்வியும்
எழுந்துள்ளது.


