சிரம்பான், டிச. 11- இரயில் தொழில்துறையின் வாயிலாக சுமார் 25,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்புகளை கல்வியை முடித்த மாணவர்களும் திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (யுனிகேஎல்) மற்றும் திவேட் பயிற்சிக் கழகங்களில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு 3,000 வெள்ளி வரை சம்பளம் வழங்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த வாய்ப்பினை யுனிகேஎல் நன்கு பயன்படுத்திக் கொண்டு இதுநாள் வரை அந்நியர்கள் வசமிருந்து துறைகளில் ஊடுருவியுள்ளது. யுனிகேஎல். மற்றும் திவேட் மாணவர்களுக்கு இரயில் தொழில்துறைகளில் குறைந்த பட்சம் தொடக்க சம்பளம் 3,000 வெள்ளி வரை வழங்கப்படுகிறது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். திறமையைப் பொறுத்து 5,000 வெள்ளி முதல் 7,000 வெள்ளி வரை ஊதிய உயர்வை அவர்கள் பெற முடியும் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு, பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் உருமாற்றுத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட எஸ்சிஎஸ்92 ரக இரயிலின் ஒப்படைப்புக் சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கிற்கு ஏற்ப விமானம், இரயில், கப்பல் உள்ளிட்ட நிபுணத்துவ மற்றும் தொழில்திறன் துறைகளில் தேர்ச்சி பெற்ற மனித ஆற்றலை உருவாக்குவதில் யுனிகேஎல் நேரடியாக ஈடுபட்டு வருவதையும் ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.
அதே சமயம் மின்னியல் துறைகளிலும் யுனிகேஎல் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. மரபுரீதியான துறைகளில் மட்டும் அல்லாது தொழில்நுட்ப திறன் துறைகளிலும் திவேட் கவனம் செலுத்தி வருகிறது என அவர் சொன்னார்.


