கோலாலம்பூர், டிச.10 - மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை உருவாக்குவது குறித்து மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ஆய்வு செய்து வருகிறது.
சிங்கப்பூரில் செய்யப்படுவது போல, தங்கள் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பிள்ளைகள் நிறைவேற்றுவதை உறுதிசெய்ய தண்டனை சார்ந்த நடவடிக்கை (தண்டனை விதிப்பு) அமல் செய்யப்படுவதை சமூகம் விரும்புகிறதா என்பது குறித்து பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
அது தவிர, சட்டத்தால் வற்புறுத்தப்பட வேண்டிய அவசியமின்றி சிறப்பான குடும்ப அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக நன்மதிப்புகள் மற்றும் பொறுப்புணர்வு பண்புகள் விதைக்கபடுவது அவசியமா என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு புதிய சட்டத்தின் வரைவை மதிப்பிடுவதற்கு அல்லது தற்போதுள்ள சட்டங்களில் பொருத்தமான திருத்தங்கள் மூலம் மேம்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும் என்று இன்று மேலவையில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.
இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட முதியோர் சட்டத்தின் சமீபத்திய நிலை குறித்து செனட்டர் சே அலியாஸ் ஹமிட் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வரும் 2030ஆம் ஆண்டில் முதுமை நாடாக மாறும் எனும் மலேசியாவின் நிலையை கருத்தில் கொண்டு இந்த சட்ட அமலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட என்று சே அலியாஸ் கூறினார்.


