கோத்தா பாரு, டிச. 10 - நேற்று தொடங்கி தொடர்ந்து பெய்த அடை
மழையின் காரணமாக கிளந்தான் மாநிலத்திலுள்ள குவாங் மூசாங், கோல
கிராய் மற்றும் தானா மேரா ஆகிய மூன்று மாவட்டங்களில் மீண்டும்
வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சுங்கை சாலில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்த காரணத்தால் 60 மீட்டர் நீள
பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் குவா மூசாங், சாலில்
கெசெடார் நில மேம்பாட்டுக் குடியேற்றத் திட்டப் பகுதியைச் சேர்ந்த 1,650
பேர் தொடர்பை முழுமையாக இழந்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக பாலம் நீரில் மூழ்கியதால் பிள்ளைகளை பள்ளிக்கு
அனுப்புவது உள்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இயலாத
நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்களில் ஒருவரான ஹூசேன்
முகமது (வயது 45) கூறினார்.
இதனிடையே, தானா மேரா மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளான
கம்போங் முரின், புக்கிட் கெச்சிக், கம்போங் லாவாங் ஆகிய கிராமங்களில்
இன்று விடியற்காலை 2.00 மணிக்கு வெள்ளம் ஏற்பட்டது.
தற்போது நிலவி வரும் மோசமான வானிலை வரும் டிசம்பர் 16ஆம் தேதி
வரை நீடிக்கும் என்றும் கடும் மழை பெய்யும் என்பதோடு கடல்
கொந்தளிப்பாகவும் இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை
கூறியது.


