கோலாலம்பூர், டிச. 6 - கிளந்தான், திரங்கானு மற்றும் கெடாவில் வெள்ளம்
வடிந்து வரும் வேளையில் தற்காலிக நிவாரண மையங்களில்
தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதே சமயம்,
ஜோகூர், மலாக்கா மற்றும் பகாங்கின் நிலைமையில் மாற்றமில்லை.
கிளந்தான் மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி ஐம்பது துயர்
துடைப்பு மையங்களில் 7,551 குடும்பங்களைச் சேர்ந்த 23,366 பேர்
தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 24,416 பேராக இருந்தது.
கெடா மாநிலத்தில் வெள்ளம் தொடர்ந்து வடிந்து வரும் நிலையில்
அங்குள்ள 23 நிவாரண மையங்களில் 1,088 குடும்பங்களைச் சேர்ந்த 3,676
பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு அம்மாநிலத்தில் 1,230
குடும்பங்களைச் சேர்ந்த 4,141 தற்காலிக மையங்களில் பேர்
தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரங்கானு மாநிலத்திலும் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது.
நேற்றிரவு 428 குடும்பங்களைச் சேர்ந்த 1,692 பேராக இருந்த வெள்ள
அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 260 குடும்பங்களைச் சேர்ந்த 1,052
பேராக குறைந்தது.
ஜோகூர் மாநிலத்தின் தங்காக் மற்றும் சிகாமாட் ஆகிய மாவட்டங்களில்
வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள 17 நிவாரண மையங்களில்
271 குடும்பங்களைச் சேர்ந்த 975 பேர் தற்காலிக மையங்களில்
அடைக்கலம் நாடியுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள கிந்தா மற்றும் பேராக் தெங்கா
மாவட்டங்களில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில் 51 குடும்பங்களைச்
சேர்ந்த 149 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மலாக்கா மாநிலத்தைப் பொறுத்த வரை வெள்ள நிலைமையில்
மாற்றமில்லை. அங்கு 37 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்தது.
பகாங் மாநிலத்தின் மாரான் மாவட்டம் தொடர்ந்து வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில்
ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் தங்கியுள்ளனர்.


