கோலாலம்பூர், டிச. 5 - சமூக ஊடகங்களில் பிற சமயங்களை
சிறுமைப்படுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் சில சமயப் போதகர்களின்
செயல்களுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டையும் அதன்
தொடர்பான கவலையையும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வெளிப்படுத்தினார்.
இண்ட்ஸ்டாகிராம் போன்ற சமுக ஊடகங்களில் சில நபர்கள் குறிப்பிட்ட
சில தோற்றங்களில் குறிப்பாக தாடியுடன் தோன்றுகின்றனர். ஆனால்
அவர்களின் நடத்தையை கூர்ந்து கவனிக்கும் போது அவர்கள் பிற
மதங்களை இழிவுபடுத்தக் கூடாது என்று தி ஸ்டார் நாளேட்டுக்கு
வழங்கிய சிறப்பு நேர்காணலில் கூறினார்.
இதற்காகத்தான் சிலாங்கூர் முழுவதும் நடைபெறும் வெள்ளிக்கிழமை
தொழுகை உரைகளில் பிற சமயங்களை சிறுமைப்படுத்தக் கூடாது என
வலியுறுத்திக் கூறப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சமயங்களுக்கிடையிலான வேறுபாட்டை பொது மக்களுடன்
பகிர்ந்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
பல்லின மற்றும் பல சமயங்களைக் கொண்ட நாட்டில் ஒற்றுமையை
பேணிக்காப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கூட்டரசு
அரசியலமைப்பில் இஸ்லாம் அதிகாரப்பூர்வ சமயமாக இருக்கும்
வேளையில் பிற சமயங்களைப் பின்பற்றவும் அரசியலமைப்புச் சட்டத்தில்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஆகவே, தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வளர்வதை சிலாங்கூர் மக்கள்
ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஆலயம், தேவாலயம் மற்றும் பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டுத்தலங்கள்
அருகருகே அமைந்திருக்கும் பன்முகத் தன்மை கொண்ட நகரமாக கிள்ளான் விளங்குவது குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக சுல்தான் சொன்னார்.
கிள்ளானில் பல சமய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்த பகுதி
தொடர்ந்து நல்லிணக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது
விருப்பமாகும். இங்கு பள்ளிவாசல்கள், சீன மற்றும் இந்து ஆலயங்கள்,
இந்திய முஸ்லீம் மசூதிகளோடு சீன முஸ்லீம் பள்ளிவாசலும்
உருவாகியுள்ளது என்றார் அவர்.


