கோலாலம்பூர், டிச.1- நாட்டில் வெள்ள நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக படை வீரர்கள் மற்றும் தளவாடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மலேசிய ஆயுதப்படை (ஏடிஎம்.) தயாராக உள்ளது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 5,600 அதிகாரிகளும் உறுப்பினர்களும் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு வெள்ளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் அவர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று மலேசிய ஆயுதப்படையின் தளபதி டான்ஸ்ரீ முகமது அப்துல் ரஹ்மான் கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்படுவோருக்கு உதவத் தயாராக இருக்கும்படி ஆயுதப்படை உறுப்பினர்களைக் வலியுறுத்தும் உத்தரவு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ஆகவே, அவர்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் தளவாட ரீதியாகவும் தயாராக உள்ளனர் என அவர் சொன்னார்.
தற்போதைய சூழலில் அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் ஏற்படும் தேவையைப் பொறுத்து உறுப்பினர்கள் மற்றும் தளவாடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான முடிவை களத்தில் இருக்கும் அதிகாரிகள் முடிவு செய்வர் என அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் இன்று அனுசரிக்கப்பட்ட வாகன பயன்பாடு இல்லா தினத்தை முன்னிட்டு டி.பி.கே.எல். சதுக்கத்தில் நடைபெற்ற நேவி ரன் 2024 நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாளை எஸ்.பி.எம். தேர்வு தொடங்கவுள்ள நிலையில் தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் தொலைவிலுள்ள பள்ளிகளுக்கு தேர்வு எழுதச் செல்வதில் எதிர்நோக்கும் சிரமத்தை குறைக்கும் வகையில் தமது தரப்பு போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தித் தரும் என்றும் அவர் சொன்னார்.


