ஷா ஆலம், நவ. 29- சிலாங்கூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 39
குடும்பங்களைச் சேர்ந்த 159 பேரை தங்க வைப்பதற்கு இரு தற்காலிக
நிவாரண மையங்கள் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளன.
புக்கிட் காப்பார் எம்.பி.கே.கே. சமூக மண்டபத்தில் திறக்கப்பட்டுள்ள துயர்
துடைப்பு மையத்தில் 21 பேரும் மேரு, சுங்கை பிஞ்சாய், தேசிய பள்ளியில்
திறக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் 138 பேரும் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக ஸ்மார்ட் சிலாங்கூர் நடவடிக்கை மையம்
(எஸ்.எஸ்.ஒ.சி.) கூறியது.
வெள்ள நிலைமையை எஸ்.எஸ்.ஒ.சி. அணுக்கமாக கண்காணித்து வரும்
அதே வேளையில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதிலும் பொது
மக்களுக்கு சமீபத்திய தகவல்களை வழங்குவதிலும் கவனம்
செலுத்தப்படும் என்று அது அறிக்கை ஒன்றில் கூறியது.
இதனிடையே, நேற்று மாலை தொடங்கி தொடர்ந்து பெய்த அடை
மழையின் காரணமாக கிள்ளான் வட்டாரத்தின் பல பகுதிகளில் வெள்ளம்
ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான்
ஹலிமி கூறினார்.
வடிகால் முறை சரியாக இல்லாத காரணத்தால் குறுகிய நேரத்தில் பெய்த
அதிகப்படியான மழையினால் பெருக்கெடுத்த நீர் விரைந்து வெளியேற
முடியாத நிலை ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
புக்கிட் செராக்கா மற்றும் புக்கிட் காப்பார் போன்ற மேடான
பகுதிகளிலிருந்து பாய்ந்தோடிய நீரின் கொள்ளளவை ஏற்கும் அளவுக்கு
ஜாலான் கெம்பாஸ் பகுதியிலுள்ள சாலையிலுள்ள வடிகால்கள் பெரிதாக
இல்லாததும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு காரணமாகும் என அவர்
குறிப்பிட்டார்.


