கோலாலம்பூர், நவ. 20- பாடத் திட்ட விவகாரம் மற்றும் புதிய
தலைமுறையினருக்கான அடையாள அட்டை தொடர்பான சமீபத்திய
நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
விவாதிக்கப்படும்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய பாடத் திட்டம்
மற்றும் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் ரீதியாக மாணவர்களின்
அடைவுநிலையை உயர்த்துவதற்கான கல்வியமைச்சின் திட்டம் குறித்து
ஸ்ரீ காடிங் பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் அமினுள்ஹூடா ஹசான்
கல்வியமைச்சரிடம் வினா தொடுப்பார்.
போலி அடையாள ஆவணப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக
நடப்பிலுள்ள அடையாள க் கார்டுகளுக்கு பதிலாக புதிய தலைமுறைய
அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின்
சமீபத்திய மேம்பாடுகள் குறித்து தெங்காரா தொகுதி பாரிசான் நேஷனல்
உறுப்பினர் மாண்ட்ஸ்ரி நாசிப் உள்துறை அமைச்சரிடம்
கேள்வியெழுப்புவார்.
பொது மக்களுக்கு 99 வயது வரை நியாயமான கட்டணத்தில் காப்புறுதி
பாதுகாப்பை வழங்கும் வகையில் காப்புறுதி நிறுவனங்களுடன்
பேச்சுவார்த்தையின் மூலம் ஐ-லிண்டோங் திட்டத்தை ஊழியர் சேமநிதி
வாரியம் வலுப்படுத்துமா என்ற கேள்வியை மிரி தொகுதி ஹராப்பான்
உறுப்பினர் சியு சூன் மான் நிதியமைச்சரிடம் முன்வைப்பார்.
கேள்வி-பதில் அங்கத்திற்கு பிறகு 2025ஆம் ஆண்டிற்கான விநியோக
மசோதா (வரவுசெலவுத் திட்டம்) மீதான செயல்குழு நிலையிலான
விவாதங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முடித்து வைத்து
உரையாற்றுவர்.
மக்களவைக் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு நடைபெறுகிறது.


