ANTARABANGSA

பிரதமர் அன்வார் பிரேசிலுக்கு பணி நிமித்தப் பயணம்- ஜி20 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பார்

16 நவம்பர் 2024, 4:53 AM
பிரதமர் அன்வார் பிரேசிலுக்கு பணி நிமித்தப் பயணம்- ஜி20 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பார்

லீமா (பெரு), நவ 16 - பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் பிரேசிலுக்கு பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் இன்று தொடங்கி வரும்  19ஆம் தேதி வரை நடைபெறும்  ஜி20 அமைப்பின்  உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

பிரதமருடன்  வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜீஸ் ஆகியோரும் இப்பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் ஜி20 தலைவர்கள் மாநாட்டில்  கலந்துகொள்வதாக பிரதமர்  அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக  வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியது.

பிரேசிலுடனான மலேசியாவின்  இராஜதந்திர நட்புறவை இந்த அழைப்பு எடுத்துக்காட்டுகிறது. நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய நிர்வாக சீர்திருத்த முயற்சிகளில் மலேசியாவின் தீவிர ஈடுபாட்டையும் இது பிரதிபலிக்கிறது என்று அது குறிப்பிட்டது.

பிரேசிலின் தலைமைத்துவத்தின்  கீழ் மலேசியா இரண்டு குறிப்பிடத்தக்க ஜி20 முன்னெடுப்புகளில்  பங்கேற்று வருகிறது. அதாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு  மற்றும் ஜி20  உயிரியல் பொருளாதார முன்னெடுப்பு ஆகியவையே அவ்விரு முன்னெடுப்புகளாகும்.

ஜி20 தலைவர்கள் உச்சநிலை மாநாட்டின் போது, ​​பிரதமர் “பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்” மற்றும் “உலகளாவிய ஆளுகை நிறுவனங்களின் சீர்திருத்தம்” ஆகிய இரு அமர்வுகளில் தேசிய அறிக்கைகளை வழங்குவார்.

பரஸ்பர நலன் சார்ந்த  இருதரப்பு மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜி20 நாடுகளின் தலைவர்களையும் அன்வார் சந்திக்க உள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.