டாம்ஷிக், அக். 7- சிரியாவின் ஹோமாஸ் மத்திய பிரதேசத்தில்
செயல்பட்டு வரும் ஈரானுக்குச் சொந்தமான கார் தொழிற்சாலை ஒன்றின்
மீது இஸ்ரேல் நேற்று மூன்று எறிபடைகளை ஏவியது.
ஹோமாஸ் நகரின் வெளியே அமைந்துள்ள ஹாஸ்யா
தொழில்பேட்டையில் செயல்பட்டு வந்த இந்த தொழிற்சாலையை குறித்து
வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக்
கொண்ட சிரியா மனித உரிமை அமைப்பு கூறியது.
இந்த தாக்குதலில் அந்த தொழிற்சாலைக்கு பலத்த சேதம் ஏற்பட்டதோடு
அடர்ந்த கரும்புகையும் அங்கிருந்து வெளியேறியதாக அந்த அமைப்பை
மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.
காலியாக இருந்த அந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் தாக்குதல்
மேற்கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இத்தாக்குதல்
குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், ஹாஸ்யாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வெடிச்சத்தம்
கேட்டதாகவும் அதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு
வருவதாகவும் சிரியா தொலைக்காட்சி கூறியது.
சிரியாவில் இருக்கும் ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புடன்
தொடர்புடையவை என கருதப்படும் இலக்குகள் மீது இஸ்ரேல்
தொடச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டத்திற்கு மத்தியில் இந்த
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் ஹெஸ்புல்லாவுடன்
ஏற்பட்டுள்ள மோதலின் ஒரு பகுதியாக சிரியா மீது இஸ்ரேல் கடந்த
வாரம் தொடர்சியாக தாக்குதல்களை மேற்கொண்டது.


