கன்பேரா, செப்.10 – சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற தொடர்புடைய டிஜிட்டல் தளங்களை அணுகுவதற்கான குறைந்தபட்ச வயதை அமல்படுத்துவதற்கான சட்டத்தை இந்த ஆண்டு இறுதியில் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அவர் செவ்வாய் அன்று கூறினார்.
"சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதை நாங்கள் அறிவோம். மேலும் இது சிறுவர்களை நண்பர்களிடமிருந்தும், வாழ்வில் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவப் பாடங்களிலிருந்தும் பிரித்து வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது," என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் ஈடுபாட்டுடன், விவரங்கள் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். ஆனால் குறைந்தபட்ச வயது 16 ஆக நிர்ணயிப்பதே தனது விருப்பம் என்றார்.
ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 61 சதவீத ஆஸ்திரேலியர்கள் 17 வயதுக்கு குறைவானவர்களுக்கு சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவதை ஆதரித்தனர்.
அதே நேரத்தில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை ஆராய முன்னாள் பெடரல் நீதிபதி ராபர்ட் பிரெஞ்சை தெற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பீட்டர் மலினாஸ்காஸ் நியமித்தார்.
சட்டத்தை உருவாக்கும் போது ராபர்ட் பிரெஞ்சின் மதிப்பாய்வை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று பிரதமர் கூறினார்.
- பெர்னாமா


