ANTARABANGSA

அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து விலகினார் ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்த ஆதரவு

22 ஜூலை 2024, 3:27 AM
அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து விலகினார் ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்த ஆதரவு

வாஷிங்டன்/அங்காரா, ஜூலை 22- அமெரிக்க அதிபர் தேர்தலில்

போட்டியிடுவதில் இருந்து தாம் விலகுவதாக நேற்று அறிவித்த நடப்பு

அதிபர் ஜோ பைடன், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ்

வேட்பாளராக களம் காண்பதற்கு தனது முழு ஆதரவைப் புலப்படுத்தினார்.

அமெரிக்க அதிபராக உங்களுக்கு சேவையாற்றுவதற்கு கிடைத்த

வாய்ப்பினை நான் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். மறுபடியும்

போட்டியிட நான் ஆர்வம் கொண்டிருந்த போதிலும் கட்சி மற்றும் நாட்டின்

நலன் கருதி போட்டியிலிருந்து விலகி எஞ்சியுள்ள இந்த தவணைக்

காலத்தில் எனது பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் கவனம்

செலுத்த விரும்புகிறேன் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட

பதிவில் கூறினார்.

வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில்

தமக்கு பதிலாக துணையதிபர் கமலா ஹாரிஸை களமிறக்க தாம் முழு

ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறியதாக அனாடோலு செய்தி நிறுவனம்

குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு

டிரம்ப்பை தோற்கடிப்பதற்கான தருணம் வந்து விட்டது. வாருங்கள் நாம்

அதனைச் செய்து முடிப்போம் என்றார் அவர்.

தனது இந்த முடிவு குறித்து தெளிவாக விளக்குவதற்காக இவ்வாரம் தாம்

நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளதாக பைடன் கூறினார்.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற டொனால்டு ட்ரம்புடனான

விவாதத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து

அவரது அதிபர் பதவிக்கான வேட்பாளர் நியமனம் கேள்விக்குறியானது.

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதில் இருந்து பைடன் விலக

வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில் கடந்த

வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில்

அக்கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளரான டோனால்டு ட்ராம்ப்

தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, அதிபர் ஜோ பைடனின் இந்த ஆதரவை தாம்

பெருமனதுடன் ஏற்பதாகவும் வேட்பு மனுவைப் பெற்று அதில் வெற்றி

பெறுவது மிக முக்கியமாகும் என கமலா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.