ஷா ஆலம், மே 11- சிலாங்கூர் எஃப்.சி.கால்பந்து குழுவின் விளையாட்டாளரான முகமது ஃபைசால் ஹலீம் மீது எரி திராவக தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உருவப்படத்தை வரையும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை
உறுதி செய்வதற்காக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று
தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன்
கூறினார்.
தற்போது நாங்கள் போட்டோஃபிட் எனப்படும் உருவப்படத்தை
உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதிலிருந்து
தகவல்களைத் திரட்ட தொடங்குவோம். குற்றப்புலனாய்வுத் துறை
இயக்குநரின் கூற்றுபடி கைரேகை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அவர்
தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப் பட்டவரான ஃபைசால், அவரின் குடும்ப
உறுப்பினர்கள், சம்பவ இடத்திலிருந்த பாதுகாவலர்கள், மருத்துவர்கள்
மற்றும் இதில் தொடர்புடையவர்கள் உள்பட 12 பேரிடம் தாங்கள் வாக்கு
மூலம் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் ஜெயா விலுள்ள பேரங்காடி ஒன்றில் கடந்த வாரம் ஃபைசால்
மீது மேற்கொள்ளப்பட்ட எரிதிராவகத் தாக்குதலில் அவருக்கு நான்காம்
கட்ட தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர் தற்போது மருத்துவமனையில்
சிகிச்சைப் பெற்று வருகிறார்.








