அங்காரா, மார்ச் 25- மேற்கு கரையின் ஜோர்டான் பள்ளத்தாக்கிலுள்ள
குடியிருப்பு பகுதியில் சுமார் 800 ஹெக்டர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த
இஸ்ரேலின் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகச்
சாடியுள்ளது.
பாலஸ்தீன பகுதியிலுள்ள 800 ஹெக்டர் நிலம் இஸ்ரேலுக்குச்
சொந்தமானதாக பிரகடனப்படுத்தப்படுவதாக அந்நாட்டு நிதியமைச்சர்
பெஸேலேல் ஸ்மோட்ரிச் கூறியதை தாங்கள் மிக வன்மையாக
கண்டிப்பதாக அந்த ஒன்றியம் அறிக்கை ஒன்றில் கூறியது.
பாலஸ்தீன விடுதலை நிறுவனத்திற்கும் (பி.எல்.ஒ.) இஸ்ரேலுக்கும்
இடையே கடந்த 1994ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தான
பிறகு மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான நில ஆக்கிரமிப்பு
நடவடிக்கை இதுவாகும் என அவர் தெரிவித்தது.
அந்த சட்ட விரோத குடியேற்றப் பகுதி கடுமையான அனைத்துலக
மனிதாபிமான சட்ட மீறலாக கருதப்படுகிறது. தங்களின் குடியிருப்புகள்
அமைந்துள்ள மேற்கு கரை முழுவதும் உள்ள சட்டவிரோத
குடியிருப்புகளை விரிவுபடுத்த இஸ்ரேல் மேற்கொண்டு வரும்
நடவடிக்கையை இவ்வாரம் கூடவுள்ள கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம்
கடுமையாகச் சாடவுள்ளதோடு இந்த முடிவை ரத்து செய்யும்படியும்
வலியுறுத்தவுள்ளது.
ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்த இஸ்ரேலின்
செயலை பாலஸ்தீன அதிபரும் வன்மையாகச் சாடினார்.
பெஞ்சமின் நெதான்யாஹூ கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் பதவிக்கு
வந்தது முதல் மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாகப் பாலஸ்தீன-இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு கூறியது.
கிழக்கு ஜெருசலம் உள்பட மேற்கு கரையில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட
பகுதிகளில் 720,000 இஸ்ரேலியர்கள் குடியிருந்து வருவதாகக் குடியேற்ற
மற்றும் தடுப்புச் சுவர் எதிர்ப்பு ஆணையம் தெரிவித்தது.


