தி ஹேக், பிப் 19 - பாலஸ்தீன பிரதேசங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட
ஆக்கிரமிப்பு தொடர்பான சட்ட விளைவுகளை விவாதிப்பதற்கு ஐ.நா.வின்
தலைமை நீதிமன்றம் இன்று கூடியது. இந்த விசாரணையில் ஐம்பதுக்கும்
மேற்பட்ட நாடுகள் தங்கள் வாதங்களை நீதிபதியின் முன்வைக்கவுள்ளன.
தி ஹேக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) தொடங்கும்
விசாரணையில் பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாட் அல்-மலிக்கி
முதல் நபராக ஆஜராகவிருக்கிறார்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனைகள் அல்லது கட்டுப்பாடற்ற
கருத்துகளை முன்வைக்கும்படி ஐ.நா. பொதுப் பேரவை கடந்த 2022ஆம்
ஆண்டு கேட்டிருந்தது.
இந்த விசாரணை வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும்.
தங்களின் ஆலோசனை கருத்துகளை வெளியிடுவதற்கு முன்னர் இது
குறித்து விவாதிக்க நீதிபதிகளுக்கு ஒரு சில மாத கால அவகாசம்
தேவைப்படும்.
கடந்த காலங்களில் இஸ்ரேல் இத்தகைய கருத்துகளைப்
புறக்கணித்தாலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல்
சுமார் 29,000 பேரை பலி கொண்டுள்ள காஸா மீதான போர் தொடர்பில்
அந்நாட்டிற்கு எதிராக அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணையில் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கா,
சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள்
பங்கேற்கவுள்ளன. இஸ்ரேல் எழுத்துப்பூர்வ பிரதிநிதித்துவத்தை
அனுப்பியிருந்தாலும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள் வெளியிடும் ஆலோசகக் கருத்து
சட்ட ரீதியிலான பிணைப்பைக் கொண்டிராவிட்டாலும் சட்ட மற்றும் தார்மீக ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐ.சி.ஜே. வட்டாரங்கள் கூறின.


