புத்ரா ஜெயா, அக் 5- கடந்த மாதம் 27ஆம் தேதி சிப்பாங்கிலுள்ள
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அரச மலேசிய சுங்கத்
துறை மேற்கொண்ட இரு அதிரடிச் சோதனை நடவடிக்கைளில் 13 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள 10 கிலோ கொக்கேய்ன், ஹெரோயின் மற்றும்
கெத்தாமின் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்த 83 வயதுடைய கொரிய
பிரஜையிடம் நடத்தப்பட்ட முதலாவது சோதனை நடவடிக்கையில் 770,000
வெள்ளி மதிப்புள்ள 3.85 கொக்கேய்ன் போதைப் பொருள் பறிமுதல்
செய்யப்பட்டதாக சுங்கத் துறையின் (அமலாக்க மற்றும் கண்காணிப்பு)
துணைத் தலைமை இயக்குநர் டத்தோ சஸாலி முகமது கூறினார்.
அதிகாரிகளின் கண்ணில் படாமலிருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட
பயணப் பெட்டியில் அந்த போதைப் பொருள் மறைத்து
வைக்கப்பட்டிருந்ததாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் விசாரணைக்காக
வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்
சொன்னார்.
கே.எல்.ஐ.ஏ. சுங்கத் துறையின் பயணிகள் சோதனை பிரிவு மேற்கொண்ட
இரண்டாவது சோதனையில் 21 வயது உள்நாட்டு ஆடவர் கைது
செய்யப்பட்டதாக கூறிய அவர், தனது வெளிநாட்டுப் பயணத்தை ரத்து
செய்த அந்த ஆடவர் தனது பயணப் பெட்டியை எடுப்பதற்காக விமான
நிறுவனம் ஒன்றின் “காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட“
பொருள்களுக்கான முகப்பிடத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டார்
என்றார்.
அந்த பெட்டியை ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிட்ட போது
அதில் போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த இரு போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் 1952ஆம்
ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.








