ஷா ஆலம், அக் 4- விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடி மற்றும்
விவசாயம் சார்ந்த தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள 500 பேருக்கு
உற்பத்தியை பெருக்குவதற்கு ஏதுவாக தலா 1,000 வெள்ளியை மாநில
அரசு வழங்குகிறது.
இந்த ஊக்கத் தொகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி வழங்கப்படும் என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இத்தொகையில் 500
வெள்ளி ரொக்கமாக வழங்கப்படும் வேளையில் எஞ்சிய தொகை
விவசாயத்திற்கு தேவையான பொருள்கள் மற்றும் உபகரணங்களாக
வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் சாகுபடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு
உதவும் நோக்கிலும் அவர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாகவும்
இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த ஊக்கத் தொகை திட்டம் அக்ரோ வங்கி மற்றும் கோஹிஜ்ரா
கூட்டுறவுக் கழகத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது என்றும் அவர்
கூறினார்.
மாநில அரசு ஆட்சிக்குழு நிர்ணயித்த 100 நாட்களில் ஐந்து முதன்மை
வாக்குறுதிகளை நிறைவேற்றும் மாநில அரசின் நோக்கத்திற்கேற்ப இந்த
திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
மாநிலத்திலுள்ள 426,656 மலிவு விலை மற்றும் கிராம வீடுகளுக்கான
மதிப்பீட்டு வரி விலக்கு மற்றும் இமாம், பிலால் மிற்றும் சியாக்
அலவன்ஸ் உயர்வு தொடர்பான அறிவிப்பையும் மந்திரி புசார் இன்று
வெளியிட்டார்.
இதனிடையே, வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஆண்டு இறுதியில்
வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசு இயந்திரம் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மந்திரி புசார் தெரிவித்தார்.








