கோலாலம்பூர், அக் 4- அரிசி ஏற்றுமதி செய்வதில் உறுப்பு நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆசியான் நாடுகளை மலேசியா கேட்டுக் கொள்ளவிருக்கிறது.
இன்று இங்கு நடைபெறும் 45 வது ஆசியான் அமைச்சர்கள் நிலையிலான வேளாண் மற்றும் காட்டுவள மாநாட்டில் இந்த கோரிக்கை முன்வைக்கப்படும் என்று விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு துணையமைச்சர் சான் ஃபூங் ஹின் கூறினார்.
இன்று நடைபெறவிருக்கும் இந்த இரு தரப்பு கலந்துரையாடல் நிகழ்வில் இவ்விவகாரத்தை நாம் முன்வைக்க விருக்கிறோம். இரு தரப்புக்குமிடையே உறவு வலுப்பெற வேண்டுமானால் அரிசி ஏற்றுமதியில் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் தாய்லாந்து அல்லது வியட்னாமுடன் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபுவின் சார்பில் இம்மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இவர் இவ்வாறு சொன்னார்.
நேற்று தொடங்கப்பட்ட பச்சரிசி ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்து கருத்துரைத்த அவர், நெல் மற்றும் அரிசி தொழில்துறையின் அனைத்து நிலையிலான விரிவான சோதனை நடவடிக்கை எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில் அரிசி மற்றும் நெல் ஒழுங்கு முறை அமைப்புகள், அமைச்சு, காவல் துறை, அரச மலேசிய சுங்கத் துறை உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்பர் என்று அமைச்சர் முகமது சாபு நேற்று கூறியிருந்தார்.








