புத்ராஜெயா, செப் 20: இன்று ஜாலான் பெர்சியாரன் உத்தாரா கிலோமீட்டர் 5.7இல் பூச்சோங் நோக்கி சென்ற லாரி மற்றும் போக்குவரத்து காவல் துறையினரின் மோட்டார் சைக்கிள் உட்பட பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.
காலை 10.15 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் ஆறு கார்கள், இரண்டு லாரிகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு போக்குவரத்து காவல் துறையினரின் மோட்டார் சைக்கிள் ஆகியவை சம்பந்தப் பட்டன. இரண்டு லாரிகளில் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தை மோதியதாக நம்பப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பின்பக்கத்திலிருந்து வந்த லாரி ஒன்று நடுப் பாதையில் இருந்து இடது பாதைக்குச் செல்லும் போது முன்னால் இருந்த வாகனங்களின் மீது மோதியது என புத்ராஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ஏ. அஸ்மாதி அப்துல் அஜீஸ் கூறினார்.
புத்ராஜெயா மற்றும் செர்டாங் மருத்துவமனைகளின் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
"சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் விசாரணைக்காக லாரி ஓட்டுனர் காவலில் வைக்கப் படுவார்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், புத்ராஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளரைப் பெர்னாமா தொடர்பு கொண்டபோது, 10.24 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற பின்னர் இரண்டு இயந்திரங்களுடன் ஒன்பது பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றார்.
– பெர்னாமா








