கோலாலம்பூர், செப் 20- ஐக்கிய நாடுகள்
சபையின் (ஐ.நா.) 78வது பொது பேரவையில்
பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு நியூயார்க்
பயணமானார்.
அன்வாருடன் அவரது மனைவி டத்தோஸ்ரீ
டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்
மற்றும் மலேசிய பேராளர் குழுவின் மற்ற
உறுப்பினர்களும் இப்பயணத்தில் இடம்
பெற்றுள்ளனர்.
உலகத் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பில், 2030
பணி நிகழ்ச்சி நிரலை அடைவதற்கு ஏதுவாக பருவநிலை
நெருக்கடியைக் கையாள்வதில் மலேசியாவின்
முயற்சிகளை தாம் பகிர்ந்து
கொள்ளவுள்ளதோடு மலேசிய மடாணி
கட்டமைப்பின் கீழ் நாட்டின் திட்ட மேம்பாடு
மற்றும் பல உலகளாவிய பிரச்சினைகள்
குறித்தும் உரையாற்றவுள்ளதாக பிரதமர்
தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய பேராளர்குழுவின் இந்தப் பணி
சுமூகமாக நடைபெற பிரார்த்தனை
செய்யுங்கள் என்று அவர் கூறினார்.
ஐ.நா.வின் இந்த வருடாந்திர பொதுப்
பேரவையில் பிரதமர் அன்வார்
கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
வரும் வெள்ளிக்கிழமை பொது பேரவையில்
மலேசியாவின் தேசிய அறிக்கையை அவர்
வழங்க உள்ளார்.








