புத்ராஜெயா, செப் 19- அதிக எடையை
ஏற்றிச் சென்றதற்காக சாலைப்
போக்குவரத்துத் துறையால் (ஜேபிஜே)
பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும்
லோரிகளின் வழக்கு நீதிமன்றத்தின் அதிகார
வரம்பிற்கு உட்பட்டது என்று அத்துறைத்
தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள்
2010ஆம் ஆண்டு தரைப் போக்குவரத்துச்
சட்டத்தின் (சட்டம் 715) 57 மற்றும் 80ஆம்
பிரிவுகளில்
குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்
அடிப்படையில் நீதிமன்றத்தில்
பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் எனவும்
அது வலியுறுத்தியது.
"சிக்கலில் ஓட்டுநர்கள், அபராதம் செலுத்தியப்
பின்னரும் ஜேபிஜே இன்னும் லோரிகளை
பறிமுதல் செய்து வைத்துள்ளது" எனும்
தலைப்பிலான அறிக்கையை சுட்டிக்காட்டிய
ஜேபிஜே, இந்த விவகாரத்தில் முடிவெடுப்பது
நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு
உட்பட்டது எனக் கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட லோரிகளை கடந்த
ஒன்பது மாதங்களாக ஜேபிஜே
விடுவிக்காததால் ஓட்டுநர்கள்
முட்டுக்கட்டையை எதிர்நோக்கியுள்ளதாகவும்
இதனால் அவர்களுக்கு வருமான இழப்பு
ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை
தெரிவித்தது.
குற்றத்துக்கான அபராதத் தொகையை
ஏற்கெனவே தாங்கள் ஏற்கனவே
செலுத்திவிட்டதாக சம்பந்தப்பட்ட
பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் கூறினர்.
அனுமதிக்கப்பட்டதைவிட 70 முதல் 140
விழுக்காட்டிற்கும் மேல் சுமையை ஏற்றிச்
செல்வது கண்டறியப்பட்டதால்
சம்பந்தப்பட்ட கனரக வாகனங்களை
பறிமுதல் செய்வது போன்ற கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜேபிஜே
கூறியது.
அதிகமான அல்லது அபாயகரமான
சுமைகளை ஏற்றிச் செல்லும் கனரக
வாகனங்கள் பிரேக் மற்றும் தொழில்நுட்பக்
கோளாறுகள் காரணமாக ஆபத்தான
விபத்துக்களுக்கு ஆளாகின்றன.
அத்துடன் சாலைகளில் சேதத்தையும்
ஏற்படுத்துகின்றன. இதுதவிர, மற்ற
வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கும்
இது வழிவகுக்கிறது என்று அது
குறிப்பிட்டது.
சாலைப் போக்குவரத்துச் சட்டங்களை
அமல்படுத்துவதில் சமரசம் செய்துகொள்ளப்
போவதில்லை என்றும் அந்த இலாகா
உறுதிபடக் கூறியது.








