கோலாலம்பூர், செப் 18 – எஸ்.பி.எம் 2023ஆம் ஆண்டு தேர்வுக்குக் கண்காணிப்பாளர்களாக இருக்க விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சகம் (MOE) முதல்முறையாகப் பொதுமக்களை அழைக்கிறது.
செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 31 வரை விண்ணப்பங்கள் திறந்திருக்கும் என்றும், ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மாநில கல்வித் துறைகளில் உள்ள மாநிலக் கல்வி இயக்குநரிடம் https://bit.ly/44KmnxL இல் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"வெற்றிகரமாகத் தன்னார்வ வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும்," என்றும் அறிவிக்கப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் எஸ்பிஎம் தகுதி அல்லது அதற்கு சமமான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கல்வி தகுதி வேண்டும். மேலும், குற்றவியல் பதிவு, நீதிமன்ற நடவடிக்கைகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் சொந்த போக்குவரத்து வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.
பிப்ரவரி 17 அன்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்தபடி, ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு நடவடிக்கைகளில் இந்த திட்டமும் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐந்து விண்ணப்பப் பிரிவுகள் உள்ளன:
- வகை ஒன்று - கல்வி சேவை அலுவலர் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.
- வகை இரண்டு - பொது உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், காலேஜ் அல்லது மெட்ரிகுலேஷன் பட்டதாரிகள்.
- வகை மூன்று - மாநில அரசு மத மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள்.
- வகை நான்கு - அரசு ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்தப் பணியாளர்கள்.
- பிரிவு ஐந்து - அரசு சாரா ஊழியர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு மற்றும் தனியார் துறை நபர்கள்.
கூடுதல் தகவல்களை மாநில கல்வித் துறைகளில் பெறலாம் அல்லது தேர்வு வாரியத்திற்கு khidmatbantu.lp@moe.gov.my மின்னஞ்சல் அனுப்பலாம்.
- பெர்னாமா








