கோலாலம்பூர், செப் 18 - இருபத்து மூன்று
வயதுக்குட்பட்ட கால்பந்து அணியின்
தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து
இ.இளவரசன் விலகுவதாக மலேசிய
கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) இன்று
அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 23
வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப்
போட்டியில் ஹரிமாவ் மூடா
அணியின் அடைவுநிலைக்குப் பிறகு அந்த
அணியின் எதிர்கால இலக்கு குறித்து
இளவரசன் மற்றும் கால்பந்து சங்கத் தலைவர்
டத்தோ ஹமிடின் முகமது அமீன்
ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்புக்குப்
பிறகு இது குறித்து முடிவு செய்யப்பட்டதாக
எஃப்.ஏ.எம். பொதுச்செயலாளர் டத்தோ நூர்
அஸ்மான் ரஹ்மான் கூறினார்.
61 வயதான அந்தப் பயிற்சியாளர் தேசிய
சீனியர் அணியில் கிம் பான் கோனின் உதவி
பயிற்சியாளராக தனது பணிகளில் கவனம்
செலுத்த ஒப்புக்கொண்டார். அடுத்த ஏப்ரலில்
கட்டாரில் நடைபெறவிருக்கும் 23
வயதுக்குட்பட்ட வர்களுக்கான ஆசியக்
கிண்ணப் போட்டிக்கு ஹரிமாவ் மூடா
குழுவைத் தயார்படுத்த புதிய
பயிற்சியாளருக்கு வாய்ப்பு வழங்க
இளவரசனின் இந்த முடிவு வழி வகுத்துள்ளது.
இளவரசனின் இடத்தை நிரப்பவுள்ளவர்
குறித்து உரிய தரப்பினருடன்
கலந்துரையாடிய பின்னரே அறிவிக்கப்படும்
என்று அவர் இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற
தாய்லாந்துடனான இறுதி தகுதிப்
போட்டியில் அந்நாட்டிடம் 0 - 1 என்ற
கணக்கில் தோல்வியடைந்த போதிலும்,
ஹரிமாவ் மூடா யு-23 குழுவை ஆசியக்
கிண்ணப் போட்டிக்கு கொண்டுச் செல்வதில்
இளவரசன் வழங்கிய பங்களிப்புக்கு ஹமிடின்
தனது பாராட்டுகளைத் தெரிவித்ததாக நூர்
அஸ்மான் மேலும் கூறினார்.
23 வயதுக்குட்பட்ட குழு பயிற்றுநராக
இளவரசன் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம்
தேதி நியமிக்கப்பட்டார். அதே
சமயம், தேசியக் குழுவின் பயிற்றுநர் பான்
கோனின் உதவிப் பயிற்றுநர் பொறுப்பையும்
அவர் வகித்து வருகிறார்.








