கோலாலம்பூர், செப் 18- கடந்த வாரம் புதன்கிழமை முதல் காணாமல்
போனதாக கூறப்படும் இளம் பெண் ஒருவர் செமினி நகரிலுள்ள
தோழியின் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்த 15 வயதுப் பெண் காணாமல் போனது தொடர்பில்
சமூக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தோழியின்
தாயார் அப்பெண்ணை காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு
நேற்று அழைத்து வந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
முகமது ஜைட் ஹசான் கூறினார்.
தனது வீட்டில் தங்கியிருக்கும் அப்பெண் காணாமல் போனதாக கூறும்
பேஸ்புக் பதிவைக் கண்டு 48 வயதான அந்த குடும்ப மாது
அதிர்ச்சியுற்றதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
குடுமபத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண்
யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியது தொடக்கக்
கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
தோழியின் வீட்டில் தங்கியிருந்த சமயத்தில் தாம் வீட்டை விட்டு
வெளியேறிய விஷயத்தை அப்பெண் தெரிவிக்கவில்லை என்றும் அவர்
குறிப்பிட்டார்.
உடலில் காயங்கள் ஏதுமின்றி நல்ல உடல் நலத்துடன் இருந்த அப்பெண்
பின்னர் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் எனவும் அவர்
சொன்னார்.
கடந்த புதன் கிழமை தங்கள் மகள் காணாமல் போனது தொடர்பில்
அவரின் பெற்றோர் அன்றைய தினமே காஜாங் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தில் புகார் செய்தனர்.




