கோலாலம்பூர், செப் 15- பண்டார் எல்மினாவில் கடந்த ஆகஸ்டு மாதம்
நிகழ்ந்த பேரிடரில் சிக்கிய விமானத்தில் இருந்த பயணிகள் யாரும்
உயிர்த் தப்புவதற்கான சாத்தியம் இல்லை. அந்த விமானத்தின் அதிவேக
அழுத்த விசையும் விமானத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீயும் இதற்கு
காரணம் என அந்த விமான விபத்து தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட
பூர்வாங்க விசாரணை அறிக்கை கூறியது.
அந்த விமானம் விபத்து தொடர்பான காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பார்க்கையில் விமானத்தின் இடபுற
இறக்கையின் நுனி முதலிலும் விமானத்தின் முன்பகுதி அதற்கு அடுத்தும்
பூமியை அதிவேகத்தில் தாக்கியுள்ளன என்று போக்குவரத்து அமைச்சின்
வான் விபத்து விசாரணை மையத்தின் அந்த அறிக்கை தெரிவித்தது.
நாம் வழக்கமாக காணக்கூடிய குறுகிய கால அதிவேகம் (0.1-0.5)
பயணிகளின் உயிருக்கு நிச்சயம் உலை வைக்கும் என்று அந்த 60 பக்க
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலுவான தாக்கம், மோதிய விதம் மற்றும் மனிதர்கள் தாங்கும் அளவைத்
தாண்டிய அழுத்தம் ஆகியவை இது உயிர்களைக் காப்பாற்றக்கூடிய
விபத்தல்ல என்பதை காட்டுகிறது என போக்குவரத்து அமைச்சின்
அகப்பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அந்த அறிக்கை கூறியது.
கடந்த ஆகஸ்டு 17ஆம் தேதி ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே
நிகழ்ந்த இந்த தனியார் விமான விபத்தில் பத்து பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் இரு விமானிகள் மற்றும் ஆறு பயணிகளும் அடங்குவர்.
மேலும் இருவர் அச்சமயம் சாலையில் பயணித்த மோட்டார்
சைக்கிளோட்டி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் ஆவர்.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் அதிவேகத்தில் பூமியைத் தாக்கியது
மற்றும் விமானத்தில் இருந்த எளிதில் தீப்பிடிக்கக் கூடிய எரிபொருள்
ஆகியவை சம்பவ இடத்தில் பயங்கரத் தீ ஏற்படுவதற்குக் காரணமாக
இருந்தன என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.
இந்த விபத்தில் பலரின் உடல்கள் கருகியதோடு யாரும்
உயிர்த்தப்பவில்லை என்றும் அது கூறியது.








