கோலாலம்பூர், செப் 15 – கிழக்கு கிள்ளான்
பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (இ.கே.வி.இ.)
திட்ட விவகாரத்தில் உடனடி கவனம்
செலுத்தப்பட வேண்டும் என்று அம்பாங்
நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா
இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டிற்குள்
கட்டுமானத்தை முடிப்பதற்கு ஆரம்பத்தில்
திட்டமிடப்பட்ட போதிலும் இத்திட்ட
அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள நீண்ட கால
தாமதம் மீது விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்றும் அவர் கேட்டுக்
கொண்டார்.
தனது தொகுதியில் பல வளர்ச்சித்
திட்டங்கள் பல ஆண்டுகளாக
ஒத்திவைக்கப்பட்ட நிலையில்
உள்கட்டமைப்பு திட்டங்களை
அமல்படுத்துவதில் அரசாங்கத்தின்
செயல்திறன் அல்லது அதன் குறைபாடு
குறித்து பக்கத்தான் ஹராப்பான்
பிரதிநிதியுமான அவர் தனது கவலையை
வெளிப்படுத்தினார்.
பன்னிரண்டுவது மலேசியா திட்டத்தின்
மத்திய தவணைக்கான மதிப்பாய்வு மீதான விவாதத்தில் கலந்த கொண்டு உரையாற்றிய
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு
விரைவுச்சாலை திட்டத்திற்கான கட்டுமானப்
பணிகள் 2015 இல் தொடங்கப்பட்டு நான்கு
ஆண்டுகளில் நிறைவு பெறத்
திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த திட்டம் இன்னும்
முடிக்கப்படாமல் உள்ளது.
மேம்பாட்டாளருக்கு ஏழு முறை கால நீட்டிப்பு
வழங்கப்பட்ட பிறகும் 2024ஆம் ஆண்டில்
மட்டுமே இத்திட்டம் முற்றுப் பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் நேற்று
மக்களவையில் கூறினார்.
இந்த திட்டம் குறிப்பிடத்தக்க வகையில்
முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது
அம்பாங், உலு கிளாங் மற்றும் உலு லங்காட்
வரை அனைத்து தடங்களையும்
இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலைப் பிரச்சனையைப் பல்வேறு
இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பினாலும் எனக்கு வெவ்வேறு பதில்கள்
கிடைத்தன.
ஆகவே, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும்
மேம்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த
விஷயத்தில் ஒரு தீர்வைக் கண்டறிய
முழுமையான விசாரணையை நடத்த
வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்
என அவர் தெரிவித்தார்.








