சிகாமாட், செப் 15- மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில்
மூன்று மூதாட்டிகள் மரணமுற்ற நிலையில் நான்கு சிறார்கள் உள்பட 11 பேர்
காயங்களுக்குள்ளாயினர். இந்த கோர விபத்து ஜொகூர் பாரு-சிரம்பான்
சாலையின் 167வது கிலோ மீட்டரில் லாபிஸ், தெனாங் ஸ்டேஷன் அருகே
நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் மாலை மணி 5.16 அளவில் தங்களுக்குத் தகவல்
கிடைத்ததாக லாபிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்
நடவடிக்கை அதிகாரி ஜக்காரியா முகமது கூறினார்.
லாபிஸ் மற்றும் பண்டார் பாரு சிகாமாட் தீயணைப்பு
நிலையங்களிலிருந்து 18 பேரடங்கிய தீயணைப்புக் குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
இரு எப்.ஆர்.டி. வாகனங்களும் இரு இ.எம்.ஆர்.எஸ். வாகனங்களும் சம்பவ
இடத்திற்கு அனுப்பப்பட்டன. சம்பவ இடத்தை அடைந்த போது பெரேடுவா
அல்ஸா, டோயோட்டா ஹைலக்ஸ் மற்றும் ஹோண்டா ஜேஸ் ஆகிய
மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதை தீயணைப்புக் குழுவினர்
கண்டனர்.
இந்த விபத்தில் மூன்று மூதாட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அல்ஸா காரிலிருந்து எழுவர், டோயோட்டா ஹைலக்ஸ்
வாகனத்திலிருந்த இருவர் மற்றும் ஹோண்டா ஜேஸ் காரிலிருந்து
இருவர் இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளாயினர் என அவர் குறிப்பிட்டார்.
இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகாகப் போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்ட வேளையில் காயமுற்றவர்கள் அம்புலன்ஸ் மூலம்
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்விபத்து குறித்து தாங்கள் தீவிர விசாரணை நடத்தி
வருவதாக சிகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
அகமது ஜம்ரி மரின்ஷா கூறினார்.








