கோலாலம்பூர் செப் 15- நாளை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு
அனுமதி கோரி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தகவல்கள் முழுமையாக
இல்லாத காரணத்தால் அந்த விண்ணப்பத்தை அரச மலேசிய போலீஸ்
படை நிராகரித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தில் ஏற்பட்டாளர்கள் தெளிவாக வழங்காத தகவல்களில்
பேரணி நடைபெறும் இடம் மற்றும் ஏற்பாட்டாளர்களின் பெயர்
ஆகியவையும் அடங்கும் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை
இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
அந்த தகவல் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டதாக கூற முடியாது.
காரணம், அதில் தகவல்கள் முழுமையாக இல்லை. ஆகவே, அதனை
காவல் துறை ஏற்கவில்லை என்று அவர் சொன்னார்.
நாட்டின் தலைநகரிலுள்ள பேரங்காடி ஒன்றின் அருகே இந்த பேரணி
நடைபெறும் என முன்னதாக கூறப்பட்டிருந்தது. எனினும், அந்தப் பேரணி
கம்போங் பாருவிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெறவுள்ளதாக
எங்களுக்கு கிடைத்த ஆகக்கடைசித் தகவல்கள் கூறுகின்றன என்று அவர்
தெரிவித்தார்.
இங்குள்ள டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்றிரவு
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
ஏற்பாட்டாளர்களிடம் நிலையான முடிவு இல்லாததால் சாலையைப்
பயன்படுத்துவோர் உள்பட பல்வேறு தரப்பினருக்கு சிரமம் ஏற்படும். வரும்
சனிக்கிழமை எங்கள் பணிகளை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக
ஏற்பாட்டாளர்கள் எங்களுடன் ஒத்துழைப்பை நல்கும்படி கேட்டுக்
கொள்கிறோம் என்றார் அவர்.
பொது அமைதியைக் காப்பது அரச மலேசிய போலீஸ் படையின்
தலையாய நோக்கமாக உள்ளதை சுட்டிக் காட்டிய சுஹைலி, அந்த பேரணி நடைபெறும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தாங்கள் தயாராக உள்ளதாகச் சொன்னார்.








