ஷா ஆலம், செப் 15- பழுதுபார்ப்பு பட்டறை ஒன்றில் ஏற்பட்ட தீயில் இரு
கார்களும் ஐந்து மோட்டார் சைக்கிள்களும் அழிந்தன. இச்சம்பவம் நேற்று
அதிகாலை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கோத்தா டாமன்சாரா மக்கள்
குடியிருப்புத் திட்டப் பகுதியில் (பி.பி.ஆர்.) நிகழ்ந்தது.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்று அதிகாலை 4.44 மணியளவில் தாங்கள்
அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி இஸ்மாயில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சுங்கை பூலோ, டாமன்சாரா, சுபாங் ஜெயா ஆகிய
தீயணைப்பு நிலையங்களிலிருந்து 20 தீயணைப்பாளர்கள் நான்கு
வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அந்த மலிவு விலை அடுக்குமாடி
குடியிருப்பின் பி புளோக்கில் அமைந்துள்ள அந்த பட்டறையின் 80
விழுக்காட்டுப் பகுதி தீயில் அழிந்து விட்டது கண்டறியப்பட்டது என்றார்
அவர்.
அதிகாலை 5.08 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வரப்பட்டதாகக் கூறிய வான் முகமது, இச்சம்பவத்தில் யாரும்
காயமடையவில்லை என்றார். தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக
அவர் மேலும் தெரிவித்தார்.








