புத்ராஜெயா, செப் 14 - லிபியாவின் கிழக்குப்
பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால்
மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக
இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை
என்று வெளியுறவு அமைச்சு கூறியது.
மார்சா எல் பிரேகாவில் வசிக்கும் இரண்டு
மலேசியர்கள் வெற்றிகரமாகத் தொடர்பு
கொள்ளப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக
இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அமைச்சு
இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டேனியல் புயலுக்குப் பிந்தைய நிலவரங்களை
அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து
வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்த கடுமையான புயல் காரணமாக டெர்னா
நகரில் இரண்டு அணைகள் உடைந்தன.
இதன் விளைவாக ஏற்பட்ட மோசமான
வெள்ளம் 8,000 க்கும் மேற்பட்டோரின்
உயிரைப் பலி கொண்டது. மேலும் 10,000
பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து
நடைபெற்று வருவதால் வெள்ளத்தில் சிக்கி
உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரும்
என அஞ்சப்படுகிறது.
டேனியல் சூறாவளியால் பாதிக்கப்பட்ட
அனைத்து மக்களுக்கும் அவர்களின்
குடும்பத்தினருக்கும் மலேசியா தனது ஆழ்ந்த
அனுதாபங்களையும் இரங்கலையும்
தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.








