கோலாலம்பூர், செப்டம்பர் 14: கோலாலம்பூர் காவல்துறை இந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் தலை நகரைச் சுற்றியுள்ள 16 இடங்களில் (பீக் ஹவர்) 2-ம் கட்ட நெடுஞ்சாலை சட்ட அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்ளும்.
கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் 31 வரையிலான முதல் தொடரில் சாலை விதிகளின் இணக்கம் குறித்து பொது மக்களின் நேர்மறையான கருத்துக்களைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நடவடிக்கையின் இரண்டாவது தொடர் மேற்கொள்ளப் படவுள்ளதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் கூறினார்.
"எப்பொழுதும் கூறுவது போல், கோலாலம்பூர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவதைத் தவிர, வாகன நிறுத்தம், போக்குவரத்து விளக்குகள், மற்றும் பல சாலை விதிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஜாலான் துன் ரசாக்/ஜாலான் அம்பாங், ஜாலான் துன் ரசாக்/ஜாலான் செமரக், ஜாலான் ராஜா லாவுட்/ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் புக்கிட் பிந்தாங்/ஜாலான் ராஜா சூலான் மற்றும் ஜாலான் இம்பி/ஜாலான் சுல்தான் இஸ்மாயில் உள்ளிட்ட 16 சந்திப்புகளை இரண்டாவது தொடர் உள்ளடக்கியதாக அலாவுதீன் கூறினார்.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை காவல்துறையைத் தவிர, சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே), டிபிகேஎல், 1,000 உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
– பெர்னாமா








