புத்ராஜெயா, செப் 14- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
மேற்கொள்ளவிருக்கும் இரண்டாவது சீனப் பயணம் கடந்த மார்ச் மாத
பயணத்தின் போது அடையப்பட்டதைப் போல் மற்றொரு சுற்று முதலீட்டு
வாய்ப்புக்கு வழி வகுக்கும் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி
கூறினார்.
ஒவ்வொரு முறையும் பிரதமர் மேற்கொள்ளும் சீனப் பயணம் வெறுமனே
புன்னகைப்பதையும் நலம் விசாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டதல்ல.
மாறாக, முதல் பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் மேம்பாடுகள் மற்றும் அடுத்தக்
கட்ட நகர்வுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர்
சொன்னார்.
இந்த பயணம் மேலும் ஒரு சுற்று முதலீட்டு வாய்ப்புக்கு வழி வகுக்கும்
என நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழில்துறை
சம்மேளனத்தின் நிகழ்வு மற்றும் 17வது சீன தொழில்முனைவோர்
மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.
வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சீனாவின் நன்னிங் நகரில்
நடைபெறவிருக்கும் 2023 சீன-ஆசியான் கண்காட்சியில் கலந்து
கொள்வதற்காக பிரதமர் அன்வார் அந்நாட்டிற்கு வருகை புரியவிருக்கிறார்.
பிரதமர் அன்வாருக்கும் சீனத் தலைவர்களுக்கும் இடையே அணுக்கமான
நட்புறவு நிலவுவதாக கூறிய ரபிஸி, சந்திப்புகள் மற்றும்
கலந்துரையாடல்களை அவ்விரு தரப்பினரும் தொடர்ச்சியாக நடத்தி
வருவதாகக் குறிப்பிட்டார்.








