கோலாலம்பூர், செப் 14- கிரிப்டோ கரன்சி அந்நிய நாணய முதலீட்டுத்
திட்ட மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி ஓய்வு பெற்ற அரசாங்க
ஊழியர் ஒருவர் 44 லட்சம் வெள்ளியைப் பறிகொடுத்தார்.
வாட்ஸ்ஆப் வழி அந்த 60 வயது நபரைத் தொடர்பு கொண்ட ஆடவர்
ஒருவர் தாம் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி நாணய முதலீட்டு
முகவர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஸாம் அப்துல் சுக்கோர் கூறினார்.
இந்த திட்டத்தில் சேர்வதற்கு தாங்கள் வழங்கும் அகப்பக்கத்தின்
வாயிலாக பதிவு செய்து கொள்ளும்படி அந்த முதியவர் கேட்டுக்
கொள்ளப்பட்டார். முதலீட்டுத் தொகையில் 5 முதல் 10 விழுக்காடு வரை
லாபம் கிடைக்கும் அவரிடம் ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது. எனினும்
முதலீட்டுக்கான கால அவகாசம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை
என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த முகவரின் ஆசை வார்த்தையில் மயங்கிய ஒய்வு பெற்ற அரசாங்க
ஊழியர் 90 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் 44 லட்சத்து 17 ஆயிரத்து 92
வெள்ளி 80 காசை இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறிய
அமிஹிஸாம், இந்த பரிவர்த்தனைகள் யாவும் கடந்த ஜூலை 18 முதல்
செப்டம்பர் 6 வரை மூன்று வங்கி கணக்குகளின் வாயிலாக
மேற்கொள்ளபட்டன என்றார்.
பணத்தை செலுத்திய பிறகு சம்பந்தப்பட்ட அந்த அகப்பத்தில் நுழையாமல்
போனதோடு அந்த முகவரையும் தொடர்பு கொள்ள இயலாததைத்
தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் அவ்வாடவர் போலீசில் புகார்
அளித்ததாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.








