கோலாலம்பூர், செப் 14- - தலைநகரின்
மத்தியில் எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 16)
நடத்த திட்டமிடப்பட்டுள்ள
``மலேசியாவைக் காப்பாற்றுவோம்``
(செலாமாட்கான் மலேசியா) பேரணியை
நடத்த காவல்துறைக்கு விண்ணப்பம் எதுவும்
வரவில்லை.
2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச்
சட்டத்தின் 9(1)வது விதியின்படி இத்தகைய
பேரணிகளுக்கான விண்ணப்பங்கள் அவை நடைபெறும்
தேதிக்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு
முன்னதாக செய்யப்பட வேண்டும் என்று
கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர்
டத்தோ அலாவுடின் அப்துல் மஜித் கூறினார்.
அதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட
நிலையில் ஏற்பாட்டாளர்களிடமிருந்து
விண்ணப்பம் எதுவும் வரவில்லை
என்று அவர் கோலாலம்பூர் காவல்துறையின்
ஏற்பாட்டிலான சாலை விதிகளை மதிப்போம்
இரண்டாம் கட்ட நிகழ்வுக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின்
இளைஞர் பிரிவினால் ஏற்பாடு
செய்யப்பட்டதாகக் கூறப்படும் அந்த
உத்தேசப் பேரணி தொடர்பில் இதுவரை
ஆறு புகார்களைத் தாங்கள் பெற்றுள்ளதாக அலாவுடின் கூறினார்.
இதன் தொடர்பான விசாரணையில்
உதவுவதற்காக பாசிர் மாஸ் நாடாளுமன்ற
உறுப்பினர் அகமது ஃபாட்லி ஷாரி மற்றும்
மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான்
அகமது ஃபைசால் வான் அகமது கமால்
உள்ளிட்ட ஐந்து பேரிடமும் போலீசார்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்றும்
அவர் சொன்னார்.
இந்தப் பேரணி தொடர்பான செய்தியாளர்
கூட்டத்தில் கலந்து கொண்ட கோம்பாக்
செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மான்
இடாம் மற்றும் பேரணி பற்றி செய்தி
வெளியிட்ட இரண்டு பத்திரிகையாளர்களிடமும் போலீசார்
வாக்குமூலம் பதிவு செய்ததாக அவர் கூறினார்.








