புத்ரா ஜெயா செப் 12- நியோஷ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு - சுகாதார கழகம் மற்றும் மித்ராவுடன் இணைந்து நடத்தப்படவிருக்கும் இந்திய இளைஞர்களுக்கான தொழில் திறன் கல்வி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க இதுவரை 852 பேர் பதிவு செய்துள்ளது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் இன்று அறிவித்தார்.
மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் நியோஷ் எனப்படும் வேலையிட
பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் வழி பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலை இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்கு இதுபோன்ற பயிற்சிகள் முக்கியமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் பிரதமர் துறையின் கீழ்
இயங்கி வரும் இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) வேலையிட பாதுகாப்பு மற்றும்
சுகாதார கழகத்துடன் இணைந்து இந்தியர்களுக்கு பிரத்தியேகமாக வேலையிட
பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி திட்டத்தை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு
செய்திருப்பதாக சிவகுமார் சொன்னார்.
இத்திட்டத்தின் கீழ் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார
அதிகாரி, பயிற்றுனருக்கான பயிற்சி, வேலையிட பாதுகாப்பு, மற்றும்
சுகாதார ஒருங்கிணைப்பாளர் மற்றும் போர்க்லிப்ட்ஓட்டுநருக்கான
பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி 9 நாள் முதல் 30 நாட்கள் வரை நடைபெறும். கடந்த ஆண்டு 170 மாணவர்கள்
பயிற்சி பெற்றனர். இம்முறை 790 மாணவர்கள் பயில்வதற்கு 36 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு தங்கும்
இடம், உணவு மற்றும் பயிற்சி அலவன்ஸ் வழங்கப்படவுள்ளது.
இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சிகளில் பங்கேற்க இதுவரை 852 இந்திய இளைஞர்கள் பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது அமைச்சர் சிவகுமார்
தெரிவித்தார்.
இந்திய இளைஞர்கள் மத்தியில் தொழில் திறன் கல்வியை பயில வேண்டும் என்ற
ஆர்வம் மேலோங்கி நிற்கிறது என்பதற்கு இந்த எண்ணிக்கை ஒரு எடுத்துக்காட்டாக
விளங்குகிறது என்றார் அவர்.








