குவாந்தான், செப் 12 - பெலாங்காய்
சட்டமன்ற தொகுதிக்கன இடைத்தேர்தலின்
போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
மொத்தம் 600 காவல்துறை அதிகாரிகள்
மற்றும் உறுப்பினர்கள் பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பகாங்
காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா
ஓத்மான் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை போதுமானது எனக்
கூறிய அவர், இடைத்தேர்தலுக்கு தயாராகும்
வகையில் சம்பந்தப்பட்டவர்கள் பயிற்சியில்
ஈடுபட்டுள்ளனர் எனக் கூறினார்.
முந்தைய தேர்தலின் போது எங்களுக்கு
கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில்,
சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு
நன்றாகவும் உத்தரவாதமளிக்கும் வகையிலும்
எந்தவித அசம்பாவித சம்பவங்களும்
இல்லாமலும் உள்ளது என்று அவர்
தெரிவித்தார்.
இடைத்தேர்தலை பாதுகாப்பான மற்றும்
அமைதியான முறையில் நடத்த முடியும் என்று
காவல்துறை நம்பிக்கை கொண்டுள்ளது
என்று இன்று இங்குள்ள மாநில போலீஸ்
தலைமையகத்தில் நடைபெற்ற பகாங்
காவல்துறையின் மாதாந்திர ஒன்றுகூடும்
நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பெலாங்காய் இடைத்தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்கள் 3ஆர் (மதம்,
இனம், ஆட்சியாளர்கள்) பிரச்சனைகளைத்
தொடக்கூடாது என்றும் அவர்கள் பிரசாரக்
கூட்டங்களுக்கு முறையான அனுமதிகளைப்
பெற வேண்டும் என்றும் யாஹாயா
நினைவூட்டினார்.
ஷா ஆலமில் உள்ள பண்டார் எல்மினா
அருகே நிகழ்ந்த விமான விபத்தில் மாநில
ஊராட்சி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல் மற்றும்
தொழில்நுட்ப துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண்
(வயது 53) உயிரிழந்ததைத் தொடர்ந்து
பெலங்காய் தொகுதியில் இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் இம்மாதம் 23ஆம் தேதி
வேட்பு மனுத்தாக்கலும் அக்டோபர் 7ஆம்
தேதி தேர்தலும் நடைபெறும்.


