கோலாலம்பூர், செப் 12 - கடந்த வியாழன் அன்று இங்குள்ள கம்போங் பாரு அம்பாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் இறந்ததில் முறைகேடு அல்லது குற்றச் செயல்கள் எதுவும் இல்லை என முதற்கட்ட காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.
கடன் கொடுத்தவர்களின் பட்டியலைக் கொண்ட தற்கொலைக் குறிப்பு உட்பட, இந்த வழக்கில் புதிய தடயங்களையும் காவல்துறை கண்டுபிடித்ததாகச் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு வசதியாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை, அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய காவல்துறையினர் அழைப்பார்கள் என்றார்.
"பிரேதப் பரிசோதனை செயல்முறை முடிந்துவிட்டது, ஆனால் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் நச்சுயியல் பரிசோதனையின் அறிக்கைக்காக (உடலில் சில மருந்துகள் அல்லது இரசாயனங்கள் இருப்பதை ஆய்வு செய்ய) காவல்துறை இன்னும் காத்திருக்கிறது," என்று அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த சம்பவத்தில், கம்போங் பாரு அம்பாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 42 வயதான பெண் மற்றும் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இவ் வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் உயில் மற்றும் பணம் அடங்கிய உறை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது மற்றும் யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா மருத்துவமனையில் தடயவியல் நோயியல் குழுவின் பரிசோதனையில் அடுக்குமாடி குடியிருப்பின் கதவு மற்றும் ஜன்னலை ஒட்டும் நாடாவைப் பயன்படுத்தி இறுக்கமாக மூடியது கண்டுபிடிக்கப்பட்டது.








