கோலாலம்பூர், செப் 11 - மொரோக்கோ
நாட்டின் மராகேச்சின் தென்மேற்கில் கடந்த
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட
நிலநடுக்கத்திற்காக அந்நாட்டு
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மலேசிய
அமைச்சர்கள் தங்கள் இரங்கலைத்
தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 2,000
க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்
என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைவதாகத்
தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை
அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
மொராக்கோ மக்களுக்காக நாம் அனைவரும்
பிரார்த்தனை செய்வோம் என்று அவர் தனது
முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் துறை (சமய
விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ முகமட்
நயிம் மொக்தார், இந்த துயரமிகு நேரத்தில்
தங்கள் அன்புக்குரியவர்களை
இழந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும்
அதே வேளையில் காயமடைந்தவர்கள்
விரைவில் குணமடையவும் வேண்டுகிறோம்
என்று சொன்னார்.
இந்த சோக நிகழ்வில் பாதிக்கப்பட்ட
அனைத்து மக்களுக்கும் தேடுதல் மற்றும்
மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள
அனைவருக்கும் இறைவனின் கருணை கிடைக்கட்டும் என்று
அவர் கூறினார் .








