கோலாலம்பூர், செப் 11- கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
ஆடவரின் சடலம் லோரி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம்
இங்குள் ஸ்தாப்பாக், டானாவ் கோத்தா கார் நிறுத்துமிடத்தில் நேற்று
நிகழ்ந்தது.
அந்த 59 வயது ஆடவரின் உடலை அவரின் சகோதரி நேற்று
விடியற்காலை 1.48 மணியளவில் கண்டதாகவும் அவர் இறந்து விட்டதை
கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள்
உறுதிப்படுத்தியதாகவும் வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.
அந்த ஆடவரின் காது மற்றும் கண்களில் காயங்களும் தலையிலும்
கன்னங்களிலும் வீக்கமும் தோள்பட்டையில் சிராய்ப்பு காயங்களும்
வாயில் இரத்தக் கசிவும் காணப்பட்டதாக அவர் நேற்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் 36 மற்றும் 37 வயதுடைய இரு
ஆடவர்களை சம்பவ இடத்தில் தாங்கள் கைது செய்ததாக அவர்
சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-92899222
என்ற எண்களில் வங்சா மாஜூ போலீஸ் தலைமையகத்தை அல்லது 03-
21159999 என்ற எண்களில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின்
ஹாட்லைனில் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தகவல்
அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








