கோலாலம்பூர், செப் 11: கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான் பள்ளத்தாக்கில்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பங்களாதேஷ் மக்களை குறிவைத்து இணையச்
சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அழைப்பு மையங்களாகச் செயல்பட்ட இரண்டு
வளாகங்கள் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டன.
இந்தச் சோதனையில் 19 முதல் 37 வயதுடைய 6 வெளிநாட்டினர் உட்பட 12 பேர் கைது
செய்யப்பட்டனர். மேலும், கணினிகள், கைப்பேசிகள், அணுகல் அட்டைகள், மூன்று
பாஸ்போர்ட்கள் மற்றும் வீட்டுச் சாவிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
செய்யப்பட்டன என பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐமிஹிசாம்
அப்துல் ஷுகோர் கூறினார்.
“முதற்கட்ட சோதனைகளில் இணையதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைன்
சூதாட்டத்தை ஊக்குவித்ததற்கான கூறுகள் கண்டறியப்பட்டன. மேலும்
மேற்பார்வையாளர்களாகவும் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாகவும் செயல்பட்டு
வந்த சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் இன்று
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டதில் ஆறு பேர் நாளை வரை மூன்று நாட்கள் தடுப்பு காவலில்
வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் 420/120B குற்றவியல் சட்டம் மற்றும் 1953 இன்
திறந்த சூதாட்டச் சட்டப் பிரிவு 4(1) இன் கீழ் விசாரணைக்காகச் செவ்வாய்க்கிழமை
வரை நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாகவும் ஐமிஹிசாம் கூறினார்.
– பெர்னாமா








