கோலாலம்பூர், செப் 10 - நாளை
திங்கள்கிழமை தொடங்கவிருக்கும்
மக்களவையின் ஆறு நாள் சிறப்பு அமர்வு
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தாக்கல்
செய்யவிருக்கும் 12வது மலேசியத் திட்டத்தின்
மத்திய தவணைக்கான மறுஆய்வு மீது
கவனம் செலுத்தும்.
இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் இரண்டு
ஆண்டுகளில் (2021-2022) அடைந்த
சாதனைகளை, உள்நாட்டு சவால்கள் மற்றும்
உலகளாவிய போக்கினைக் கருத்தில் கொண்டு அடுத்த
மூன்று ஆண்டுகளுக்கான (2023-2025)
நிலையான, செழிப்பான, மற்றும் உயர்
வருமானம் கொண்ட நாடாக
உருவாவதற்குரிய இலக்கினை மதிப்பீடு
செய்யும் நோக்கில் இந்த நாடாளுமன்றக்
கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது.
இந்த 12வது மலேசியத் திட்ட மத்தியகால
மதிப்பாய்வு நாளை திங்கள்கிழமை காலை 10
மணிக்கு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பான விவாதம் செவ்வாய் முதல்
வியாழன் வரை நடைபெறும். அதே நேரத்தில்
அமைச்சர்களின் பதில் அளிக்கும் அங்கம்
அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய்க்
கிழமைகளில் நடைபெறும் என
மக்களவையின் நாட்காட்டியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னிரண்டாவது மத்தியகால மதிப்பாய்வு தொடர்பில் அமைச்சர்கள்
மற்றும் அமைச்சுகளின் தலைமைச்
செயலாளர்களுடன் பிரதமர் கடந்த ஜூன்
மாதம் 19ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை
நடத்தினார். திட்டமிட்ட சீர்திருத்தங்கள்
மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை
விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக அனைத்துக்
தரப்பினரும் குழுவாகச் செயல்படவும்
அக்கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம் வலுவாக
இருப்பதை உறுதி செய்யவும் மலேசியா
மடாணி இலக்கை அடைவதற்கான சரியான
பாதையில் அது செல்வதற்கு ஏதுவாகவும்
12வது மலேசியத் திட்டத்தின் மத்தியகால
மதிப்பாய்வு நடத்தப்படுகிறது என்று
நிதியமைச்சருமான அன்வார் தனது முகநூல்
பதிவில் தெரிவித்திருந்தார்.








