புத்ராஜெயா, செப் 8- இந்நாட்டில் தொற்றா
நோய்களால் (என்.சி.டி.) மொத்தம் 73
விழுக்காட்டு இறப்புகள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே இதற்கு
முக்கிய காரணமாகும் என்று துணை
நிதியமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சௌனி
கூறினார்.
ஏறக்குறைய பாதி மலேசியர்கள் தாங்கள்
தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டதை
அறியாமலிருக்கின்றனர் என்று 2023 ஆம்
ஆண்டுக்கான தேசிய நிலையிலான
ஆரோக்கியமான மலேசிய மாத கொண்டாட்டங்களை இன்று
இங்கு தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினருக்கு தொற்றா
நோய் பாதிப்பு இருப்பது தெரியாது.
அவர்கள் ஆரம்ப சிகிச்சையை நாடவில்லை
என்றால் சிக்கல்களை அதிகரித்து
அபாயத்திற்கு வழிவகுக்கும் என்று அவர்
எச்சரித்தார்.
2019 தேசிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய
நிலை ஆய்வின்படி நாட்டில் உள்ள
பெரியவர்களில் இருவரில் ஒருவர் அதிக
எடை மற்றும் பருமனாக உள்ளனர். மேலும்
இந்த பிரச்சனையை எதிரநோக்குவோரில்
பெண்களில் 54.7 விழுக்காட்டினராகவும் 55
முதல் 59 வயதுடையவர்கள் 60.9 விழுக்காடாகவும் உள்ளனர் என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்த ஆய்வின்படி, நாட்டில் நான்கு
பெரியவர்களில் ஒருவர் உடல் ரீதியாக
சுறுசுறுப்பாக இல்லை. மேலும் மிகவும்
மந்தமாக உள்ளத் தரப்பினரில் பெண்கள் 28
சதவீதம், மாணவர்கள் 39 சதவீதம் மற்றும்
முதியவர்கள் 59 சதவீதமாக உள்ளனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப்
பின்பற்றும் விஷயத்தில் அவர்களுக்கு
குறைந்த அளவிலான சுகாதார கல்வியறிவு
இருப்பதையும் கணக்கெடுப்பு
கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக 25.1
விழுக்காட்டினர் உடல் ரீதியாக
ஆரோக்கியமற்றவர்களாகவும் 94.9
விழுக்காட்டினர் காய்கறிகள் மற்றும்
பழங்களை உணவில் சேர்க்காதவர்களாகவும்
23.1 விழுக்காட்டினர் புகைப் பழக்கம்
உள்ளவர்களாவும் இருக்கின்றனர் என்றார்
அவர்.
ஆரோக்கியமான மலேசியா தேசிய நிகழ்ச்சி
நிரல் திட்டத்தின் மூலம்
அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கிய மாத
கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியில்
சுகாதாரம் மீதான விழிப்புணர்வை
அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வழி ஆரோக்கியமான
நடைமுறைகளுக்கு அவர்களின் நடத்தையை
மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.








