கோலாலம்பூர் செப் 5-
முடிதிருத்தும் கடைகள், ஜவுளி மற்றும் நகைக்
கடைகள் உள்ளிட்ட மூன்று இந்திய
பாரம்பரிய தொழில் துறைகளுக்குப்
பணியமர்த்தப்படும் வெளிநாட்டு
ஊழியர்களின் எண்ணிக்கை இந்த
வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை
கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று
மனிதவள அமைச்சர் வ சிவகுமார்
தெரிவித்தார்.
முன்னதாக முடக்கப்பட்ட மூன்று
துறைகளிலும் வெளிநாட்டு பணியாளர்களைப்
பணியமர்த்துவது தொடர்பான விரிவான
விஷயங்கள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இன்னும் விரிவான விஷயங்கள் இருந்தால்,
இந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு நான் அவற்றை
முறையாக அறிவிப்பேன் என்று எச்.ஆர்.டி.
கோர்ப் நிறுவனத்தின் தேசிய பயிற்சி
குறியீட்டை அறிமுகப்படுத்திய பின்னர்
செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய
பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நிய
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி
கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த மூன்று துறைகளுக்கும் அந்நிய
தொழிலாளர்களை பெற்றுத் தர மனித வள
அமைச்சர் சிவகுமார் கடந்த 9 மாதங்களாக கடுமையான முயற்சிகளை
மேற்கொண்டார்.
உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு
வாணிப வாழ்க்கை செலவின அமைச்சுடன்
பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான
அனுமதியை அமைச்சர் சிவகுமார் பெற்றார்.
ஒப்புதல் பெறுவதற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை
அமைச்சரவை கூட்டத்தில் இதை தாக்கல்
செய்ய அமைச்சர் சிவகுமார் முடிவு
செய்திருந்தார்.
இந்நிலையில் , முன்பு முடக்கப்பட்டிருந்த
மூன்று துறைகளுக்கு வெளிநாட்டு
ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான
விண்ணப்பங்களில் ஒரு பகுதியை அரசாங்கம்
அங்கீகரித்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
நேற்று அறிவித்தார்.








