சுங்கை பூலோ, செப் 5: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 2,940 சிறைத் துறை குடியிருப்புகள் 41 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருவதாக மலேசியச் சிறைத்துறையின் துணை தலைமை ஆணையர் (மேலாண்மை) அப்துல் காடிர் ரைஸ் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் சிறைத் துறையின் உள்கட்டமைப்பு பராமரிக்கவும் மேம்படுத்தவும் இந்த ஒதுக்கீட்டை வழங்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சிறைத்துறை நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றார் அப்துல் காடிர்.
"இந்த திட்டம் சிறைத்துறை ஊழியர்களுக்கு மிகவும் வசதியான சூழலில் பணியாற்றுவதற்கான உற்சாகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த நடவடிக்கை வேலையின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
இன்று சுங்கை பூலோ சிறைச்சாலையில் 1 ஆம் கட்ட ஊழியர் குடியிருப்புக்கான சாவிகளை கையளிக்கும் நிகழ்வுக்குப் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நாடு முழுவதும் மொத்தம் 102 சிறைத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டதாக அப்துல் காடிர் கூறினார்.
"மொத்தம் 10 திட்டங்கள் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன, அதாவது தைப்பிங் சிறை மற்றும் லாபுவான் சீர்திருத்த மையத்தில் தலா இரண்டு திட்டங்கள், கமுண்டிங் சீர்திருத்த மையம் மற்றும் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தலா ஒரு திட்டம் ஆகும்.
"மேலும், மூவார் அறநெறி மறுவாழ்வு மையம், குவாந்தனில் உள்ள பெனோர் சிறை, கெனிங்காவ் ஹென்றி கெர்னி பள்ளி மற்றும் தெலோக் மாஸ் ஹென்றி கெர்னி பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒரு திட்டம் செயல்படத்தப்பட்டன," என்று அவர் கூறினார்.
மேலும் 45 திட்டங்கள் 50 சதவீதத்தை தாண்டி முன்னேறியுள்ள நிலையில் 31 திட்டங்கள் இன்னும் 50 சதவீதத்தை எட்டவில்லை. மீதமுள்ளவை எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
– பெர்னாமா








