கோலா லங்காட், செப் 5: கோலா லங்காட்டில் மூன்று சகோதரிகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை நாடு அறியும்.
அந்த குடும்பத்துக்கும், அவர்களது தாய்- தந்தைக்கு ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த வேதனை துயரம் சொல்லில் அடங்காது. வயதான காலத்தில் தங்களுக்கு கஞ்சி ஊற்றும் என்ற நம்பிக்கையை உடைத்த அசம்பாவிதமாக அந்த மூன்று சகோதரிகளின் மரணம் அமைந்து விட்டது வருத்தப்பட வேண்டிய சம்பவமாகும்.
இது போன்ற துயர சம்பவம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இன்று அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம் நாளை இன்னொருவருக்கு ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டே சிலாங்கூர் மாநில அரசு பெரிய பொருட் செலவில் மாநில மக்கள் அனைவருக்கும் காப்பீடு திட்டத்தை ஏற்படுத்தியது.
மூன்று மகள்களைப் பறிகொடுத்த திருமதி அஞ்சலையைத் தேடி தாமான் கெம்பிராவில் உள்ள அவரது இல்லத்திற்கு கடந்த ஆகஸ்ட் 29 தேதி மீடியா சிலாங்கூர் சென்றது. அங்கு அவர்களின் 52 வயது தாயாரான கே அஞ்சலை மற்றும் அவரின் கணவரை சந்தித்தது.
அந்த தாயார் தனது மகள்களின் துயர பிரிவினை நினைவு கூறிய வேளையில், நீரில் மூழ்கி தனது மூன்று பிள்ளைகள் இறந்ததை தொடர்ந்து பெறப்பட்ட சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டத்தின் (இன்சான்) இழப்பீட்டுத் தொகையின் நகலையும் மீடியா சிலாங்கூரிடம் காட்டினார். அச்சமயம் அவர்களின் தந்தையான லெட்சுமணன் சுப்பையாவும் (58) உடன் இருந்தார்.
``இதுப் போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியாது, எங்கள் பிள்ளைகளின் உயிர் விலை மதிப்பற்றது. ஆனால், அரசாங்கம் வழங்க வரும் சில உதவிகளை கூட பெற முடியாமல் நாம் இருக்க கூடாது`` என்றார்.
இது குறித்து கருத்துரைத்த மீடியா சிலாங்கூர் அதிகாரி, ஒவ்வொரு சம்பவமும் நமக்கு ஒரு படிப்பினையாக அமைகிறது. பல ஊர்களிலிருந்து சிலாங்கூருக்குக் குடியேறியவர்கள், இங்கு தொழில் புரிபவர்கள், இம்மாநிலத்தில் வசிப்பதற்கான ஆதாரங்களின்றி உள்ளனர்.
அவர்களுக்கு இது போன்ற உதவிகள் கிட்டுவதில்லை. அதனால் நாம் குடியிருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது அடையாள அட்டையின் முகவரியை மாற்றி கொள்வதுடன். சிலாங்கூர் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளுங்கள். அதனால் பல மக்கள் நலன் திட்டங்களில் பங்கெடுக்க, அது உதவியாக இருக்கும் என்றார்.








