புத்ராஜெயா, ஆக 29- இம்மாதம் 17ஆம் தேதி ஷா ஆலம், பண்டார்
எல்மினாவில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் காக்பிட் குரல் பதிவு
கருவியின் தரவுகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில்
வெற்றிகரமாக மீட்கப்பட்டன.
அந்த கருவியின் தயாரிப்பு நிறுவனமான எல்3ஹாரிஸின் நிபுணர்கள்
உதவியோடு விமான விபத்து விசாரணை மையம் அந்த கருவியிலிருந்த
தரவுகளை மீட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
கூறினார்.
விமானி அறை குரல் பதிவுக் கருவியின் தரவுகள் வெற்றிகரமாகப்
பதிவிறக்கம் செய்யப்பட்டன. குறிப்பாக அந்த விமானம்
விபத்துக்கள்ளாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்ற
உரையாடல்கள் அனைத்தும் பதவிறக்கம் செய்யப்பட்டு விட்டன என்று
இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அந்த ஒலிப்பதிவு மலேசியாவிலுள்ள விசாரணைக் குழுவிடம்
அனுப்பப்பட்டு விட்டதாக க் கூறிய அவர், இவ்விபத்து தொடர்பான
பூர்வாங்க அறிக்கை இரு வாரங்களில் வெளியிடப்படும் என்றார்.
இதன் வழி இரு விமானிகளுக்கிடையிலான உரையாடல்களை
அனைத்தையும் ஆய்வு செய்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
விமானியின் அறையில் நடைபெற்ற உரையாடல்களை அடிப்படையாகக்
கொண்டு விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று
அவர் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை கத்ரி நெடுஞ்சாலை அருகே, பண்டார் எல்மினா
செல்லும் வழியில் ஏற்பட்ட இந்த விமான விபத்தில் 10 பேர்
உயிரிழந்தனர்.
அந்த விமானத்தில் பயணம் செய்த பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் உள்பட அறுவரோடு இரு விமானிகளும்
இச்சம்பவத்தில் பலியாகினர். விமானம் விழுந்த போது அச்சாலையில்
பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் கார்
ஓட்டுநர் ஆகியோரும் மரணமுற்றனர்.








