ஈப்போ, ஆக 29- பராமரிப்பு மையம் ஒன்றில் அடைக்கலம் நாடியிருந்த
தன் சகாவை படுகொலை செய்ததாக அதே மையத்தில் தங்கியிருக்கும்
நபர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் முன்னிலையில் தமக்கெதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட
போது அதனைத் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக லாய் முன் கோங்
(வயது 50) என்ற அந்நபர் தலையை அசைத்தார். இந்த வழக்கு
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால்
குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இம்மாதம் 24ஆம் தேதி மாலை 6.00 மணிக்கும் 6.30 மணிக்கும் இடையே
சிம்மோர், ஜாலான் ஜெலாப்பாங்கில் உள்ள அந்த பராமரிப்பு மையத்தின் ஏ
புளோக்கில் உள்ள கழிப்பறையில் லிம் ஹான் தோங் (வயது 42) என்ற
ஆடவரை கொலை செய்ததாக லாய் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையும் மரண தண்டனை
விதிக்கப்படாத பட்சத்தில் 30 முதல் 40 ஆண்டுச் சிறைத்தண்டனை மற்றும்
12 பிரம்படிகளும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது
பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
அரசுத் தரப்பில் நுர் அக்கிலான ஷியாசா அரிபின் இந்த வழக்கை நடத்தும்
வேளையில் லாய் மூனை எதிர்த்து யாரும் ஆஜராகவில்லை.








