கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: நேற்று தாமான் அம்பாங் ஹிலிர், அம்பாங்கில் பெய்த கனமழை மற்றும் புயலின் காரணமாக வீசிய பலத்த காற்றினால் அங்குள்ள அடுக்குமாடி வீட்டின் மற்றும் கடையின் மேற்கூரைகள் பறந்து சென்றன.
இந்தச் சம்பவத்தால் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது சிரமமாக உள்ளது என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
எனினும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
"நேற்று பிற்பகல் 4.49 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து, பண்டான் மீட்பு தீயணைப்பு நிலையத்திலிருந்து (பிபிபி) மொத்தம் ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்றார்.
"அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மற்றும் பொதுமக்கள் உடன் இணைந்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் குடியிருப்பாளர்களுக்கு இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.








