ஷா ஆலம், ஆக 28- நாடாளும்ன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற
2023ஆம் ஆண்டிற்கான இளைஞர் நாடாளுமன்ற விவாத நிகழ்வில் கலந்து
கொண்ட100 இளைஞர்களின் அற்புத பேச்சாற்றல் குறித்து சுற்றுச் சூழல்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் பெருமிதம்
தெரிவித்தார்.
இந்த விவாத நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தக்க
ஆதாரங்களோடு துல்லியமாகவும் ஆக்ககரமான முறையிலும் தங்கள்
வாதங்களை முன்வைத்தது கண்டு தாம் பெரிதும் வியப்படைந்ததாக
அவர் சொன்னார்.
இந்த விவாத நிகழ்வில் கலந்து கொண்ட 100 இளைஞர்கள் நடப்பு
விவகாரங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தங்கள் வாதங்களை
முன்வைத்தனர். இன்றைய இளைஞர்களின் மத்தியில் காணப்படும்
நேர்மைறையான அம்சமாக இதனை நான் பார்க்கிறேன் என்று அவர்
தெரிவித்தார்.
துல்லியமான ஆதாரங்களுடன் வாதிடக்கூடிய ஆற்றலை மட்டும் அவர்கள்
கொண்டிருக்கவில்லை மாறாக, அவர்களின் கருத்துகளும் அவற்றை
முன்வைத்த விதமும் என்னை பெருமிதம் கொள்ளச் செய்தது என்று
அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய கினி மற்றும் மலேசிய நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற
பருவநிலை மாற்ற மசோதா தொடர்பான விவாதத்திலும் ஜமாலியா
கலந்து கொண்டார்.
தற்போது நாம் எதிர்நோக்கி வரும் பருவ நிலை மாற்றம் தொடர்பான
விவகாரம் தொடர்பில் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் எனக்கு
இந்நிகழ்வில் வாய்ப்பு வழங்கப்பட்டது என அவர் அந்த பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் இயற்கை வளம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை
மாற்றத் துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஜிஸ், புக்கிட் காசிங்
சட்டமன்ற உறுப்பின்ர் ராஜிவ் ரிக்ஷியாகாரன் பலாக்கோ உறுப்பினர்
வேய்னி ஓங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




